கேரட் சட்னி / carrot chutney
தேவையான பொருட்கள்
கேரட் – 4
பச்சை மிளகாய் – 3
பூண்டு – 3 பற்கள்
புளி – நெல்லிக்காய் அளவு
எள் – 1 தே. கரண்டி
சீரகம் – 1 தே. கரண்டி
தேங்காய் துருவல் – 3 தே. கரண்டி (தேவைப்பட்டால்)
உப்பு – தேவையான அளவு
கடுகு, உளுந்து, பெருங்காயம் – தாளிக்க
எண்ணை – சிறிதளவு
செய்முறை
கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எள், சீரகம் இவற்றை எண்ணை விடாமல் வறுத்து எடுத்து பொடித்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணை விட்டு பூண்டு, பச்சைமிளகாய், கேரட், தேங்காய் துருவல் ஆகியவற்றை முறையே போட்டு நன்றாக வதக்கி எடுக்கவும்.
கேரட் கலவையுடன் எள், சீரகப் பொடி, உப்பு, புளி இவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்தெடுக்கவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயம் போட்டு தாளித்து சட்னியில் கலக்கவும்.
கேரட் சட்னி தயார். இது ரவா உப்புமா, இட்லி உப்புமாவுக்கு அருமையாக இருக்கும். இட்லி தோசைக்கும் நன்றாகவே இருக்கும்.
3 comments மே 31, 2008
உப்பு உருண்டை/ உப்பு கொழுகட்டை/ uppu urundai / uppu kozukattai
இது என் அம்மா எனக்குச்சொன்ன சமையல் குறிப்பு
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி – 2 கப்
கடலை பருப்பு – 1/2 கப்
தேங்காய் – சிறிதளவு (சிறு பற்களாக நறுக்கியது)
கடலை பருப்பு – ஒரு பிடி
காய்ந்த மிளகாய் – 5
கடுகு, உளுந்து தாளிக்க
எண்ணை சிறிதளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை
அரிசியை , பருப்பை தண்ணீரில் 8 மணி நேரம் ஊரவிடவும்.
பருப்பை கரகரப்பாக அரைக்கவும். அரிசியை மிருதுவாக அரைத்து முன்னம் அரைத்த பருப்புடன் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணை விட்டு அதில் கடுகு உளுந்து போட்டு தாளிக்கவும்.
பிறகு அதில் காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, தேங்காய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
கலவை நன்றாக வதங்கியதும் அதில் அரிசி, பருப்புக் கலவையைக் கொட்டிக் கெட்டியாகும்வரை கிளறவும்.
சிறிது நேரம் சென்றபின் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
ஓரளவு ஆறிய பிறகு அந்தக் கலவையை உருண்டைகளாக உருட்டி இட்லி குக்கரில் வைத்து(கொழுகட்டை வேகவைப்பது போல்) வேகவைத்து எடுக்கவும்.
சுவையான உப்புருண்டை தயார். இதை மாலை உணவாக பரிமாறலாம்.
Add comment மே 30, 2008
பயத்தம்பருப்பு தோசை/ மூங் தால் தோசை / moong dal dosai
தேவையான பொருட்கள் 2 பேருக்கு
பயத்தம்பருப்பு [சிறுபருப்பு] – 1 கப்
தயிர் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 5 அல்லது 6
பூண்டு – 3 அல்லது 4 பல்
உப்பு தேவையான அளவு
செய்முறை
பயத்தம் பருப்பை தாராளமாக தண்ணீர் விட்டு 5 அல்லது 6 மணி நேரம் ஊரவிடவும்.
நன்கு ஊரியதும் பச்சை மிளகாய், பூண்டு,தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த மாவில் தயிர்,உப்பு சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
தோசைகளை வார்த்து எடுத்து தேங்காய் சட்டினியுடன் சூடாக பரிமாறவும்.
குறிப்பு
மாவில் தண்ணீர் அதிகமிருந்தால் ஒரு தே. கரண்டி அரிசி மாவு கலந்து உபயோகிக்கலாம்.
மாவு ஓரளவுக்கு இலகுவாக இருக்கவேண்டும், கெட்டியாக இருந்தால் தோசை கடினமாக இருக்கும்.
தயிரை கடைந்தபின் மாவில் சேர்த்தால் கட்டி தட்டாது.
வேண்டுமளவு தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள் தோசையின் மென்மை கூடும். அளவுக்கதிகமானால் புளித்துவிடும் கவனம்.
சுவை நன்றாக இருக்க சூடாக இருக்கும்போதே உண்ணுங்கள். அவ்வளவுதான்.
3 comments மே 23, 2008
ஃப்ரைட் இட்லி / fried idly
தேவையான பொருட்கள்
மீதமான இட்லிகள் : 5/6
மைதா மாவு : 5 தே. கரண்டி
மிளகாய்த் தூள்: 1 தே. கரண்டி (உங்கள் தேவைக்கு ஏற்ப)
பிரட் கிரம்ஸ்: 1/2 கப்
உப்பு : தேவையான அளவு
எண்ணை பொரித்தெடுக்க
செய்முறை:
இட்டிலியை 8 துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதாமாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். (பஜ்ஜி மாவு பதத்திற்கு)
ஒரு அகலமான தட்டில் பிரட் கிரம்ஸை கொட்டி பரவலாக வைக்கவும்.
இட்டிலி துண்டுகளை மைதாமாவு கலவையில் புரட்டி, பிரட் கிரம்ஸில் புரட்டி தனியே வைக்கவும்.
அடுப்பில் வாணலி வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் இட்டிலி துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும்.
தக்காளி சாசுடன் மாலை உணவாக, தேனீர்/காஃபியுடன் பரிமாறலாம்.
உங்களுக்கு விருப்பனால்
வெங்காயம் – 1 (நீளவாக்கில் மெலிதாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடிதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3அல்லது4
கடுகு,உளுந்து – தாளிக்க
உப்பு சிறிதளவு
தக்காளி சாஸ் – 2 தே. கரண்டி
ஃப்ரைட் இட்லி துண்டுகள்
வாணலியில் சிறிது எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்து போட்டு தாளிக்கவும்.
பச்சை மிளகாய் , வெங்காயம், தக்காளி, ஆகியவற்றையும் போட்டு நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
நன்றாக வதங்கியதும் தக்காளி சாஸ் ஊற்றி கிளறவும்.
சிறிது நேரம் சென்றபின் ஃப்ரைட் இட்லி துண்டுகளை சேர்த்து கிளறிவிடவும்.
இதை அபெடைசராக பரிமாறலாம்.
2 comments மே 22, 2008
பப்பாளி பழ அல்வா (Papaya halwa )
தேவையான பொருட்கள்:
பப்பாளி பழ துண்டுகள் : 3 கப்
சர்க்கரை : 3/4 கப் (உங்கள் தேவைக்கேற்ப)
நெய் : 4 தே. கரண்டி
காய்ச்சின பால் : 1/2 கப் (உங்கள் தேவைக்கேற்ப)
ஏலப்பொடி – சிறிதளவு
முந்திரி – 7
பாதாம் பருப்பு – 7
செய்முறை:
- முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.
- பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்கொள்ளவும்.
- அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு பப்பாளி பழ துண்டுகளை போட்டு வதக்குங்கள்.
- பச்சை வாடை போனதும் காய்ச்சின பாலை ஊற்றி நன்கு வேக விடவும்.
- பப்பாளி குழைந்து வரும், அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.
- அல்வா சுண்டிவரும்போது மீதமுள்ள நெய்விட்டு கிளறிவரவும்.
- பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் வரும்பொது முந்திரி, பாதாம், ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்.
- பப்பாளி பழ அல்வா தயார்.
குறிப்பு:
பப்பாளி நன்றாக பழுத்ததாக இருக்கவேண்டும் (தோல் மஞ்சள் நிறமாக இருக்கும்)
பப்பாளி இயல்பாகவே இனிப்பு என்பதால் சர்க்கரை அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.
பழம் கிடைக்கவில்லையென்றால் பப்பாளிக்காயிலும் செய்யலாம்.
செய்முறை
- பப்பாளிக்காயை தோல் நீக்கி துறுவிக்கொள்ளவும்.
- சர்க்கரை 2 கப் பப்பாளிக்கு 1 கப் வீதம் போடலாம். (காயில் இனிப்பு குறைவு)
- நிறத்துக்கு சிறிதளவு கேசரிபொடி உபயோகிக்கலாம்.
- மற்ற செய்முறை மேற்கூறியவாறுதான்.
1 comment மே 2, 2008
ரவா பொங்கல் / Rawa pongal
தேவையான பொருட்கள் (2 பேருக்கு)
_________________________________
ரவை – 1 1/2 கப்
பயத்தம் பருப்பு – 1/2 கப்
முந்திரி – சிறிதளவு
மிளகு – 1 தே. கரண்டி
சீரகம் – 1 தே. கரண்டி
இஞ்சி – சிறு துண்டு
பச்சை மிளகாய் – 1 அல்லது 2
உப்பு தேவையான அளவு
நெய் தாளிக்க
செய்முறை
___________
*நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
*மிளகு , சீரகம் வறுத்து லேசாக பொடித்து தனியே வைக்கவும்.
*பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்துக்கொள்ளுங்கள்.
*பயத்தம் பருப்பை நெய்யில் லேசாக வறுத்து 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். முக்கால் பாகம் வெந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.
*ஒரு வாணலியில் நெய் ஊற்றி இஞ்சி பச்சை மிளகாய் போட்டு தாளித்து அதில் ரவையையும் கொட்டிக் கிளறுங்கள். வேண்டிய அளவு உப்பு சேருங்கள். பச்சை வாசனை போகும் வரை கிளறுங்கள்.
*அடுப்பை சிம்மில் வைத்து ரவையுடன் பயத்தம் பருப்பை கொட்டிக் கிளறி உடன் கொதித்த நீரையும் ஊற்றுங்கள். கெட்டிப்படாமல் நன்றாகக் கிளறி பாத்திரத்தை மூடி வைக்கவும்.
*சிறிது நேரம் கழித்து மிளகு, சீரகம்,முந்திரி ஆகியவற்றைக் கொட்டிக் கிளறவும், கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
*சூடாக தேங்காய் சட்டினியுடன் பரிமாரவும்.
3 comments ஏப்ரல் 29, 2008
பச்சரிசி ஹல்வா (Rice Halwa)
என் அம்மா எப்பவும் செய்யும் ஒரு பலகாரம் இது, அரிசி ஹல்வான்னுதான் சொல்லிப் பழக்கம் வேறு பெயர் இருக்கா தெரியலைங்க.
தேவையான பொருட்கள் ( 4 பேருக்கு)
_______________________
பச்சரிசி மாவு : 2 கப்
கடலை பருப்பு : 1 கப்
வெல்லம் : 11/2 கப்
நெய் : 1/2 கப்
முந்திரி, ஏலப்பொடி சிறிதளவு
செய்முறை:
___________
*அரிசிமாவுடன் தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.
*சிறிதளவு நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து எடுத்து வைக்கவும்.
*ஒரு கனமான பாத்திரத்தில் கடலைபருப்புடன் 3 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். குழையக் கூடாது ஓரளவுக்கு திடமாக இருக்க வேண்டும்.
*பருப்பு வெந்தவுடன் அதில் அரிசிமாவுக் கரைசலை ஊற்றி கிளறிக்கொண்டே இருக்கவும். மாவு வெந்துவரும். (தண்ணீர் கையில் தொட்டு மாவை தொட்டுப் பார்த்தால் ஒட்டாது இருக்க வேண்டும் இதுதான் பதம்.)
*வெல்லத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டவும். இந்த வெல்லத்தண்ணீரை சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்கவைத்து வெந்த அரிசிமாவுடன் சேர்த்துக் கிளறவும்.
*முந்திரி , ஏலப்பொடி, நெய் சேர்த்து கிளறி விடவும்.
*பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது இறக்கிவிடவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் நெய் தடவி அதில் இந்த பச்சரிசி ஹல்வாவை ஊற்றவும். ஆறினதும் பரிமாறவும்.
குறிப்பு:
______
ஹல்வாவை கிண்டிக்கொண்டே இருக்கவேண்டும் இல்லையெல் அடிபிடித்து விடும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது இறக்கிவிடவும்.ரொம்ப கெட்டியாவும் இருக்க கூடாதுங்க 
உங்களுக்கு விருப்பமான நெய் இன்னும் சேர்த்துக்கலாம். சாப்பிட நல்லாயிருக்கும் ஆனா உடம்புக்கு ஆகாதில்லையா?
(அப்படிப்பார்த்தா வெல்லம்,அரிசி மாவும், முந்திரி,பருப்பு… ஹலோ.. அப்ப ஹல்வாவை எப்படித்தான் கிண்டுறது ??
)
1 comment ஏப்ரல் 28, 2008
(ச்)சில்லி சிக்கன் ஃபிரை/ chili chicken Fry
தேவையான பொருட்கள்:
_______________________
எலும்பில்லாத கோழி இறைச்சி : 1/2 கிலோ
மிளகாய்த்தூள் : 2 தே. கரண்டி (உங்கள் சுவைக்கேற்ப)
சோளமாவு: 1 தே. கரண்டி
முட்டை : 1
பச்சை மிளகாய்: 6 (உங்கள் தேவைக்கேற்ப)
இஞ்சி : ஒரு சிறு துண்டு
டொமாடோ சாஸ்: 4 தே.கரண்டி
சோயா சாஸ் : 2 தே. கரண்டி
சில்லி சாஸ்: 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் : சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எண்ணை பொரிக்க, தாளிக்க வெண்ணை 2 தே. கரண்டி
அஜினமோட்டோ தேவையென்றால் 1/2 தே.கரண்டி
செய்முறை
__________
*கோழி இறைச்சியை சுத்தமாக்கி சிறு துண்டுகளாக்கி வைத்துக்கொள்ளவும்.
*ஒரு முட்டையுடன் ஒரு தே. கரண்டி சோளமாவை நன்றாகக் கலந்து இறைச்சியுடன் சேர்க்கவும் உடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, ஒரு தே. கரண்டி சோயா சாஸ் ஆகியவற்றை கலந்து 1/2 மணி நேரம் ஊறவிடவும்.
*ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி ஊறின இறைச்சியை கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுக்கவும்.
*பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். இஞ்சியை பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
*ஒரு வாணலியில் வெண்ணை போட்டு அது காய்ந்ததும் இஞ்சி மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் பொரித்து வைத்திருக்கும் இறைச்சியையும் சேர்த்து கிளறவும்.
* சிறிது நேரம் சென்றபின் ஒரு தே.கரண்டி சோயா சாஸ்,சில்லி சாஸ், 4 தே. கரண்டி டொமாடோ சாஸ் போட்டு கிளறிவிடவும்.
சில்லி சிக்கன் தயார். பரோட்ட, சப்பாத்திக்கு சூப்பரா இருக்குங்க.
குறிப்பு:
_______
உங்களுக்கு விருப்பமானால் பச்சை மிளகாய்க்கு பதில் வரமிளகாய் போட்டுக்கொள்ளலாம்.
இஞ்சியை ஓரளவு சிறிதாக நறுக்கினால் போதும்.. உண்ணும்பொழுது அவ்வப்பொழுது சிக்கும் இஞ்சி துண்டுகளின் சுவை அலாதியாக இருக்கும்.
மிகவும் டிரையாக இருக்கவேண்டாமென்றால் பச்சை மிளகாய் வதக்கும் பொழுது சிறிது வெங்காயமும் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
உங்களுக்கு தேவையான அளவுக்கு காரத்தை போடுங்க.
Add comment ஏப்ரல் 28, 2008
கத்திரிக்காய் சட்னி
(4 பேருக்கு)தேவையான பொருட்கள்
_________________________________
பெரிய கத்திரிக்காய் – 5
வரமிளகாய் – 8 (தேவைக்கேற்ப குறைத்துக்கொள்ளவும்)
உளுந்து – 2 தே. கரண்டி
புளி – சிறிதளவு
உப்பு தேவையான அளவு
சர்க்கரை – 1 தே.கரண்டி (விருப்பமானால்)
கடுகு,உளுந்து,பெருங்காயம் – தாளிக்க
எண்ணை – தாளிக்க
செய்முறை
___________
* கத்திரிக்காயின் தோலைச்சுற்றிலும் சிறிதளவு எண்ணை தேய்த்து அடுப்புத் தீயில் நன்றாக சுட்டு எடுக்கவும். மேல் தோல் கறுப்பாக மாறிவிடும், உரிப்பதற்கும் ஏதுவாக இருக்கும். ( சுட்டு எடுக்க முடியவில்லையென்றால் ஒரு வாணலியில் போட்டு எல்லா பக்கமும் நன்றாக வறுத்து எடுக்கவும்)
*கத்திரிக்காயின் மேல் தோலை நீக்கிவிடவும்.
*ஒரு வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி அதில் வரமிளகாய் போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின்னர் உளுந்து போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
*மிக்ஸியில் வரமிளகாய்,உளுந்து,புளி,உப்பு,சர்க்கரை ஆகியவற்றை போட்டு நன்றாக மசிய அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
*மசிந்தபின் அதில் உரித்து வைத்திருக்கும் கத்திரிக்காயை சேர்த்து அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் சேமிக்கவும்.
*ஒரு வாணலியில் எண்ணைவிட்டு அதில் கடுகு, உளுந்து, பெருங்காயம் போட்டு தாளித்து பின்னர் அரைத்து வைத்த விழுதை சேர்த்து கிளறிவிடவும். மேலே கொத்துமல்லி தூவி அலங்கரிக்கவும்.
இது இட்லி, தோசைக்கு அருமையாக சேரும்.
4 comments ஏப்ரல் 26, 2008
கடலைமாவு கட்லெட்
தேவையான பொருட்கள்
கடலை மாவு : 1 1/4 கப்
உருளைக்கிழங்கு – 3
பச்சை மிளகாய் – 5
வெங்காயம் – 3
மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
கடுகு,சீரகம், சோம்பு,உளுத்தம்பருப்பு – 1/2 தே.கரண்டி (ஒவ்வொன்றும்)
நெய் -சிறிதளவு
கறிவேப்பில், கொத்துமல்லி- சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எண்ணை – தேவையான அளவு
செய்முறை
பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்ஹ்து தோலுரித்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், சோம்பு ஆகியவற்றைப்போட்டுத் தாளித்துக்கொள்ளவும்.
பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுச் சிவக்க வதக்கிக்கொண்டு வேகவைத்த உருளைக்கிழங்கையூம் போட்டு வதக்கிக் கொள்ளவேண்டும்.
அதன்பின் மிளகாய்த்தூளையும் உப்பையும் போட்டு நன்கு மசித்துக்கொள்ளுங்கள். கடைசியாக கொத்துமல்லித்தழையையும் போட்டு நன்றாக கிளறிவிடுங்கள்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவைக் கொட்டிச் சிறிது நீர்விட்டுக் கெட்டியாகப் பிசைந்து அதைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
அந்த மாவு உருண்டைகளை வட்ட வடிவில் தேய்த்துக்கொண்டு அவற்றின் நடுவே மசாலாவை வைத்து முக்கோண வடிவில் மடித்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணைவிட்டு காய்ந்ததும் கட்லெட்டுகளை ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும்.
இதை தக்காளி சாஸுடன் பரிமாரலாம்.
Add comment ஏப்ரல் 25, 2008
